சுரங்கப்பாதையில் நாளை முதல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.... ஒரு ஜிலீர் அனுபவம்
திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் நாளை மே 14 முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது.
சென்னை: திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் நாளை மே 14 முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. சென்னைவாசிகளுக்கு இது ஒரு புது அனுபவமாகவே இருக்கும்.
இந்த சுரங்கப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது தொடர்பான பாதுகாப்பு முறைகளை மெட்ரோ அதிகாரிகள் செய்துக்காட்டினர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் பயணம்
முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் மேம்பாலம் பணிகள் முடிந்த நிலையில், கடந்தாண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதாவின் கடைசி விழா
இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் தொடக்கவிழாவில் ஜெயலலிதா பங்கேற்றதுதான் கடைசி விழாவாகும்.
சுரங்க ரயில் பாதை
மூன்றாம் கட்டமாக திருமங்கலம்- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதன் தொடக்க விழாவில் பங்கேற்கிறார். முழுக்கமுழுக்க சுரங்கப்பாதை வழியாகவே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் சுரங்கப் பாதை வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் பயணம் செய்வது ஒரு புது அனுபவமாகவே இருக்கும்.
ரயில் நிலையங்கள் தயார்
நேரு பூங்கா முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை, சுமார் எட்டு கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழு ரயில் நிலையங்களை கொண்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
தீ விபத்தை எப்படி சமாளிப்பது
இந்தநிலையில் சுரங்கப்பாதையில் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கினர். அப்போது, திடீரென சுரங்க ரயில் பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது தொடர்பான பாதுகாப்பு முறைகளை அதிகாரிகள் செய்துக்காட்டினர்.
மிரள வைத்த புகை
சுரங்கப்பாதையில் திடீரென உருவான புகை ஒருவித மிரட்சியை ஏற்படுத்தியது. மொத்தத்தில் சென்னை பெருநகரத்தில் வசிக்கும் மக்களுக்கு சுரங்க ரயில் பாதையில் மெட்ரோ ரயில் பயணம் ஒரு வித ஜிலீர் அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. வி ஆர் வெயிட்டிங்.