மதுரை அருகே இறந்த சிறுமிக்கு சிகிச்சை.. மருத்துமனையை நொறுக்கிய உறவினர்கள்!
மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் சேர்ந்து மருத்துவமனையைத் தாக்கி சேதப்படுத்தினர்.
பல ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை காப்பாற்ற தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள பெற்றோர்கள், சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
திருமங்கலத்தை அடுத்த மைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், அழகுமீனாள். இவர்களது மகள் தர்ஷினி. 5 வயதான சிறுமிக்கு காய்ச்சல் ஏற்படவே திருமங்கலம் எஸ்.கே.ஜி மருத்துவமனையில் சனிக்கிழமையன்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அன்றைய தினமே ரூ.20000 பணத்தை கட்டச்சொன்ன மருத்துவமனை நிர்வாகத்தினர், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தையை கண்காணித்தனர்.
அதன் பின்னர் பலவித சோதனைகளை செய்துள்ளதாக கூறிய நிர்வாகத்தினர், வைரஸ் காய்ச்சல் என்றும், சிகிச்சைக்காக ரூ.50000 பணத்தை உடனடியாக கட்டவேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து பணத்தை கடன் வாங்கி உடனடியாக கட்டினர். ஆனாலும் குழந்தையை ஒருமுறை கூட பார்க்கவிடவேயில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஞாயிறன்று காலையில் சிறுமி இறந்துவிட்டதாக பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை எப்போது இறந்தது என்பது பற்றி கூறாமல் 75000 ரூபாய்வரை பணத்தை கட்டணமாக பெற்றுக் கொண்டதாக சிறுமியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கினர். மருத்துவமனையை மூடி சீல் வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் பெற்றோரையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தினர். சிறுமியின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றி மைக்குடிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு அமைதி திரும்பியது.
இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணா பட பாணியில் இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனையை பெற்றோர்களும், உறவினர்களும் முற்றுகையிட்ட சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.