கூட்டணி ஆட்சி அமையும் - காட்டுமன்னார் கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்த திருமா நம்பிக்கை
கடலூர்: காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் வேட்புமனுவை திருமாவளவன் அளித்தார்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் தொடங்கியது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
25ம் தேதி திங்கட்கிழமை முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியிலும், திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியும் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக முதல்வர் அன்புமணி ராமதாஸ் 25ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருமாவளவன் மனு தாக்கல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவத் தொல் திருமாவளவன் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் தனது மனுவை அவர் அளித்தார்.
மனு தாக்கலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், சட்டசபைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுவதாக கூறினார்.
காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறிய திருமாவளவன், தமிழகம் முழுவதும், மக்கள் நலக்கூட்டணி தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். என்றும், ஊழலை ஒழிப்போம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.