அனிதா உடலுக்கு திருமாவளவன், வீரமணி, சுப.வீ, பா.ரஞ்சித் நேரில் அஞ்சலி.. அரசுக்கு எதிராக முழக்கம்
திருச்சி: மாணவி அனிதா உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மாணவி அனிதாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக குழுமூரிலுள்ள அவரது வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பல கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று காலை 11 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் அனிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அனிதா உடல் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர் முழக்கமிட்டனர். திருமாவளவன் முழக்கத்தை பிற நிர்வாகிகள் பின்தொடர்ந்து முழங்கினர்.
"விடமாட்டோம், விட மாட்டோம்.. அனிதாவுக்கு நியாயம் கிடைக்கும்வரை விடமாட்டோம்" என அவர்கள் முழக்கமிட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யவும், மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், இயக்குநர் பா.ரஞ்சித், முத்தரசன் போன்றவர்களும் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.