தடையை மீறி தர்மபுரி இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தினால்- திருமாவைக் கைது செய்ய திட்டம்
தர்மபுரி: தர்மபுரி இளவரசனுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவரைக் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் திவ்யா என்ற பெண்ணை காதலித்தார். சாதியின் காரணமாக அவர்கள் இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து இளவரசன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறந்து நாளை மறுநாளுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்பினர் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
ஆனால், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட கூடாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அன்புமணி ராமதாஸ் மற்றும் விஜயகாந்தின் உங்களுடன் நான் ஆகிய நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தடையை மீறி தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைந்து இளவரசன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவேன் என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதனை அடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளும், கலவரங்களும் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருமாவளவனையும் கைது செய்யும் முனைப்பிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.