ஜவாஹிருல்லாவை சந்தித்துவிட்டு அப்படியே கர்நாடக அரசுக்கு குட்டு வைத்த திருநாவுக்கரசர்
சென்னை: எந்தக் கட்சி எந்த மாநிலத்தை ஆண்டாலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் காவிரியில் இருந்து தண்ணீரை உடனடியாக கர்நாடாக அரசு திறந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ளது மனித நேய மக்கள் கட்சியின் அலுவலகம். இன்று இந்த அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் ஜவாஹிருல்லாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மனித நேய மக்கள் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். என்றாலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதுகுறித்தும் விவாதித்தோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் மதவாதத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்கள் உள்ளன. அதற்குள் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். வரும் 3ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது. அதற்கு கர்நாடக அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 6000 கன அடி நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆண்டு வருகிறது என்பது முக்கியமல்ல. யாராக இருந்தாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதே போன்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.