ஆதரவாளர்களுக்கு கட்சி பதவி தர முடியாமல் திணறும் திருநாவுக்கரசர்.. எதிர்கோஷ்டி குஷி
கட்சியில் தனது ஆதரவாளர்களுக்கு நல்ல பதவிகளை வாங்கித்தர முடியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திணறி வருகிறார்.
சென்னை: தனது ஆதரவாளர்களுக்கு கட்சி பொறுப்புகளை வாங்குவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு. இத்தனைக்கும் செய்தித்தொடர்பாளர் பதவி மட்டுமே அவரது ஆதரவாளர்களுக்கு சிக்கியுள்ளது சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரசின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் திருநாவுக்கரசு. காங்கிரசில் புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட்டால் முந்தைய தலைவரால் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் தானாகவே பறிபோகும். புதிய தலைவர் கொடுக்கும் நிர்வாகிகள் பட்டியல் செல்லுபடியாகும். அந்த பட்டியலுக்கு அகில இந்திய தலைமை ஒப்புதல் வழங்கும்.
திருநாவுக்கரசு புதிய தலைவராக நியமிக்கப்பட்டதும் புதிய நிர்வாகிகளாக தனது ஆதரவாளர்கள் பலரையும் கொண்டு வரும் முயற்சியை எடுத்தார். ஆனால், இப்போதைக்கு புதிய நியமனங்கள் வேண்டாம்; பழைய நிர்வாகிகளே தொடரட்டும். நாங்கள் சொல்லும் போது மாற்றம் நடந்தால் போதும் என சொல்லி, திருநாவின் ஆசைக்கு தடைப்போட்டார் சோனியாகாந்தி.
இதனால், தனது ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் வழங்க முடியவில்லையே என நொந்துபோனார். நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் அவரது கைகள் கட்டப்பட்டதில் கோஷ்டி தலைவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. இந்த நிலையில், செய்தி தொடர்பாளர்கள் பதவியிலாவது ஓரிருவரை உட்கார வைத்துவிட ராகுல்காந்தியிடம் பகீரதப்பிரயத்தனம் செய்து வந்தார் திருநாவுக்கரசர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அதற்கு ஒப்புதல் தந்துள்ளார் ராகுல்காந்தி. அதன்படி, தமிழக காங்கிரசில் ஏற்கனவே இருக்கும் செய்தி தொடர்பாளர்களோடு தனது ஆதரவாளர்கள் சொர்னா சேதுராமன், சிவராஜசேகரன், பெனட் அந்தோணிராஜ் ஆகிய மூவரையும் நியமித்திருக்கிறார் திருநாவுக்கரசர். செய்தி தொடர்பாளர்கள் நியமனத்துக்கே இந்த பாடுபட வேண்டியிருக்கே என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஆதங்கம் எதிரொலிக்கிறது.