நெல்லை: கூட்டத்தில் மேயரை திட்டிய துணைமேயர்: அழுது கொண்டே வெளியேறினார்
திருநெல்வேலி: நெல்லையில் மேயர் துணைமேயர் இடையே மோதல் வலுத்துள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த போது மேயர் புவனேஸ்வரியை துணைமேயர் கணேசன் திட்டியதால் அவர் அழுதுகொண்டே வெளியேறியதாக கூறப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் புவனேஸ்வரி(அதிமுக). துணை மேயராக கணேசன் (அதிமுக) இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அழைத்து சமரச பேச்சு நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்தது.
இன்று அதிமுக மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் தலைமையில் நெல்லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். சமரச கூட்டத்திலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் துணைமேயர் கணேசன், மேயர் புவனேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறுகிறது. இதனால் மேயர் புவனேஸ்வரி அழுதபடியே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மேயர், துணைமேயர் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதால் நெல்லையில் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.