ராமேஸ்வரத்தில் மாற்றுப்பாதையில் சென்ற ரத யாத்திரை தடுத்து நிறுத்தம் - நெல்லை நகருக்குள் நுழைய தடை
ராமேஸ்வரத்தில் மாற்றுப்பாதை வழியாக செல்ல முயன்ற ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நெல்லை: ராமேஸ்வரத்தில் இருந்து ஈசிஆர் வழியாக செல்லாமல் தேவிப்பட்டிணம் வழியாக செல்ல முயன்ற ரத யாத்திரை தடுக்கப்பட்டது. அதேபோல நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பிய ரத யாத்திரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி நெல்லை வந்து குமரி செல்ல உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கவும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கிய இந்த யாத்திரை மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களைக் கடந்து, கேரளாவில் இருந்து புனலூர் வழியாக தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு செவ்வாய்கிழமை வந்தடைந்தது.
இந்த ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் பல இடங்களில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. ரத யாத்திரை பிரச்சினை சட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறியற்றப்பட்டனர். தொடர்ந்து அதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராம பூமியில் இருந்து ராமேஸ்வரம் வரை என துவங்கி தன் பயணத்தை ராமேஸ்வரத்தில் முடித்த இந்த ரத யாத்திரை, ஊர் திரும்புகிறது. இராமநாதபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி மாவட்ட எல்கையான வேம்பாருக்கு காலை வருவதாக திட்டம்.
திடீரென இந்த யாத்திரை செல்லும் வழி மாற்றப்பட்டது. ஈசிஆர் சாலை வழியாக செல்லாமல் தேவிப்பட்டிணம் வழியாக சென்றதால் பதற்றம் உருவானது. இதனையடுத்து ரத யாத்திரை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அனுமதிக்கப்பட்ட பாதையில்தான் ரத யாத்திரை செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து சூரங்குடி, குளத்தூர், மேல அரசரடி, தருவைகுளம் வழியாக வந்து மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் புதூர் பாண்டியாபுரம் பகுதிக்கு ரதம் வருகிறது. இதனைத் தொடர்ந்து புறவழிச்சாலையாக சென்று தூத்துக்குடி - நெல்லை நான்குவழிச்சாலையில் கோரம்பள்ளம், புதுக்கோட்டை, வாகைகுளம், வல்லநாடு, முறப்பநாடு பாதையில் நெல்லை மாநகருக்குள் செல்வதாக திட்டம்.
இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் வாகனசோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை புறநகர் வழியாக ரத யாத்திரை செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ரத யாத்திரையை முன்னிட்டு மார்ச் 19 முதல் 23 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.