நெருங்கும் சட்டசபை தேர்தல்: துப்பாக்கிகளை ஒப்படைக்க நெல்லை கலெக்டர் உத்தரவு
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பாதுகாப்பு கருதி நெல்லை மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை துப்பாக்கிகளை எடுத்து செல்வதற்கு தடையாணை அமலுக்கு வந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்களது துப்பாக்கிகளை வரும் 20ம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து சுமார் ஒரு வார காலத்திற்குள் மீண்டும் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.