சபாஷ்.. சுற்றுச்சூழலை காப்பதில் நாட்டிலேயே பெஸ்ட் மாநகரம்.. சாதனை படைத்த நெல்லை!
தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் அறிவுசார் நகரமான நெல்லை, சத்தமேயில்லாமல் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது.
நெல்லை: தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் அறிவுசார் நகரமான நெல்லை, சத்தமேயில்லாமல் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது.
மட்கும் மற்றும் மட்காத குப்பையை பிரித்து அகற்றுவதில் நாட்டிலேயே முதல் முறையாக 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது திருநெல்வேலி மாநகரம்.
நாடு முழுக்கவுமே மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து மாநகராட்சி அல்லது நகராட்சி ஊழியர்களிடம் அளிக்குமாறு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பிரித்து தராவிட்டால் குப்பையை அகற்றமாட்டோம் என உள்ளாட்சி நிர்வாகங்கள் கடும் எச்சரிக்கையையும் பிறப்பித்துள்ளன.
சில மாதங்கள் முன்பு
இதேபோன்ற ஒரு திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரலில் நெல்லையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரம், மற்றும் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி தினம் முதல்தான் தொடங்கப்பட்டது.
முதல் நகரம் நெல்லை
வெறும் ஐந்தே மாதங்களில், முழுமையாக இத்திட்டத்தை பயன்படுத்தும் நகரமாகியுள்ளது நெல்லை. நாட்டிலேயே 100 சதவீதம் இவ்வாறு குப்பைகளை பிரித்தளிக்கும் ஒரே நகரம் நெல்லைதான். அதிகாரிகளின் வழிகாட்டுதல்களும், நெல்லை மக்களின் விழிப்புணர்வுமே இதை சாத்தியமாக்கியுள்ளது.
அதிகாரிகள் பிரமிப்பு
மொத்தம் 4.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாநகராட்சியில், இதுபோன்ற சாதனை குறுகிய காலத்தில் எப்படி நடந்தது என்பதை பார்த்து பிரமித்து போயுள்ளன பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், அனைத்து வீடுகளுக்குமே இரு வகையான குப்பை தொட்டிகளை வினியோகித்தோம். தினமும் மட்கும் குப்பைகளை வீடுகளுக்கே சென்று மாநகராட்சி தொழிலாளிகள் எடுத்து வருவார்கள். மட்காத குப்பைகளை புதன்கிழமைதோறும் எடுப்பார்கள்.
மக்கள் ரெடி
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு வெறும் 8 வீடுகள் மட்டுமே குப்பையை பிரித்து தரவில்லை. இதை பார்த்து எங்களுக்கே ஆச்சரியமாகிவிட்டது. இப்போது 100 சதவீத வீடுகளிலும் குப்பை பிரித்தே அளிக்கப்படுகிறது. மக்கள் மாற்றங்களுக்கு தயாராகத்தான் உள்ளனர். அதிகாரிகள் அவர்களோடு கைகோர்ப்பதுதான் அவசியம். இதை உணர்ந்துதான் நகர மக்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் இக்கோரிக்கையை நான் வைத்தேன். ஒலி பெருக்கி மூலமும் வேண்டுகோள்விடுத்தோம் என்கிறார் பெருமிதத்தோடு.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு
நெல்லையில் மொத்தம் சுமார் 1.60 லட்சம் வீடுகள் உள்ளன. ஐந்தே மாதங்களில் அத்தனை வீடுகளிலும் குப்பை பிரித்தளிக்கப்பட்டு வருவது உண்மையிலேயே ஆச்சரியம் அளிப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மட்காத குப்பைகளால், மழை நீர் நிலத்தடிக்குள் செல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடுகிறது. இதை தவிர்க்கவே குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.