நெல்லையப்பர் கோவிலுக்கு ஏப்.27-ல் கும்பாபிஷேகம்.. ஜோதிடர்கள் கடும் எதிர்ப்பு
நெல்லையப்பர் கோயிலில் ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்த இருப்பது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
Recommended Video
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்த ஜோதிடர்களும் சாஸ்திர விற்பன்னர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் நெல்லையப்பர் கோவில் தாமிரசபையாகும். இந்த கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தற்போது இரண்டு ஆண்டுகள் தாமதமாக, வரும் 27ஆம் தேதி அதிகாலை 4.40 மணி முதல் 5.10 மணிக்குள் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா குறித்து தேதி அறிவிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட நிலையில் கும்பாபிஷேக தேதியை மாற்ற வேண்டும் என ஜோதிடர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர்
நெல்லைக்கு பெயர் வருவதற்குக் காரணமே நெல்லை வேலியிட்டுக் காத்த நெல்லையப்பர்தான்! இந்தக் கோயிலில் பாலாலயம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது வருகின்ற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறப் போவதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் ஆட்சேபம்
இந்நிலையில் பக்தர்கள் தரப்பில் திருப்பணி 10சதவீதம் கூட நடைபெறாத நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதா என கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு வழிகளில் பக்தர்கள் தரப்பில் இருந்து ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆட்சிக்கு ஆபத்தா
ஏப்ரல் 27 அன்று அன்று கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டுக்கும் அரசுக்கும் அரசு ஆட்சி செய்பவர்களுக்கும் கேடு வரும் என்று சாஸ்திரங்கள் குறித்திருப்பதை அறிந்தும், இதனை பிரபல ஜோதிடர்கள் சொல்லி சுட்டிக் காட்டியும் கூட ஏன் இந்த தேதியில் வைத்தார்கள்? என தருமை ஆதீனமும், கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் தெரிவித்ததாக தருமை ஆதீன வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆதினம் கேள்வி
அறநிலையத் துறை இந்த தேதியில் கும்பாபிஷேகம் நடந்தால் மட்டுமே ஆனித் திருவிழா நடைபெறும் எனத் தெரிவித்ததாகவும், அதற்காகவே அவசரமாக பாலாலயம் செய்துள்ளனர். நெல்லையப்பர் கோவிலில் என்று பாலாலயம் ஆனதோ, அன்றிலிருந்தே குழப்பங்கள்தான். எனவேதான் குறிப்பிட்ட தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டு மக்களுக்கும்,அரசு செய்யும் ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும், மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்தும் கேடும் உள்ளது என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.
சித்திரையில் கும்பாபிஷேகம்
சித்திரை மாதத்தில் எந்த தேதியும் சிறப்பாக இல்லை. வைகாசி மாதம் மலமாதம் என்பதால், இந்த வருட வைகாசி மாதத்தில் குடமுழுக்கு உள்ளிட்ட சுபகாரியங்கள் நடத்தக் கூடாது என்று தேதி குறித்தவர்கள் கூறினர். எனினும் வேறு வழியின்றி ஆனித் திருவிழா நடத்த வேண்டும் என்பதற்காக வேறு வழியின்றி சித்திரை மாதம் 14ஆம் தேதி ஏப்ரல் 27ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்த தேதி குறித்துள்ளனர்.
ராமேஸ்வரம் கோவில் குடமுழுக்கு
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த பலரும் எதிர்த்து தெரிவித்தனர். போதாயன அமாவாசை' தினத்தில் அவசர அவசரமாக முகூர்த்தக்கால் நட்டனர். ஆள்பவருக்கும், நாட்டிற்கும் ஆபத்து என்று பலரும் சுட்டிக்காட்டி வழக்கு போட்டனர். எனினும் கும்பாபிஷேகம் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட்டது. எச்சரித்தது போல அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.