நெல்லையில் விலங்குகள் சரணாலயம், விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயம் – ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் உயிரினச் சரணாலயமும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒசூடு ஏரிப் பகுதியில் பறவைகள் சரணாலயமும் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டார்.
அந்த தமிழ்நாட்டின் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியினை உறுதி செய்யவும், தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக்கவும், நடப்பு ஆண்டில் உயிர்ப்பன்மை பாதுகாப்பு, அடிப்படை இயற்கை வளங்களை பெருக்க தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல் மற்றும் ஆளுமைத் திறன் மேம்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டப்பணிகள் 110 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
வளமான சூழல் அமைப்பினை உறுதி செய்யும் வகையில், உயிர்ப்பன்மை பாதுகாப்பு, வனப் பணியாளர்கள் திறம்பட வனங்களைப் பாதுகாத்து மேம்படுத்திட உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பினை அதிகரித்தல், காடு வளர்ப்பு போன்ற பணிகள் 35 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு ஆண்டு மேற்கொள்ளப்படும்.
உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் தமிழ்நாடு தற்போது முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 14 வன உயிரின சரணாலயங்களும், 5 தேசிய பூங்காக்களும், 14 பறவைகள் சரணாலயங்களும், 4 புலிகள் காப்பகங்களும், 4 யானைகள் காப்பகங்களும், 3 உயிர்க்கோள் காப்பகங்களும், ஒரு பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப் பகுதியும் உள்ளன.
சுற்றுச் சூழலுடன் இணைந்த உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை "பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மையின்" கீழ் கொண்டு வருவதன் மூலம் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. எனவே, உயிரியல் முக்கியத்துவம் நிறைந்த பகுதிகளை வன உயிரின சரணாலயமாக ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 15 ஆவது வன உயிரினச் சரணாலயமாக "நெல்லை வன உயிரினச் சரணாலயம்" ஏற்படுத்தப்படும்.
மேலும், இடம் பெயர்ந்து வரும் பல்வேறு பறவையினங்களின் குளிர்கால புகலிடமாக மட்டுமின்றி, உயிர்ப் பன்மை செறிந்ததாகவும் விளங்கும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒசூடு ஏரிப் பகுதி தமிழ்நாட்டின் 15 ஆவது பறவைகள் சரணாலயமாக ஆக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.