திருப்பதி பிரம்மோற்சவம்: சென்னையில் இருந்து செப்.21ல் திருக்குடை ஊர்வலம்
திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
சென்னை: திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
சென்னையில் இருந்து செப்டம்பர் 21ஆம் தேதியன்று திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது என்று ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியுள்ளார்.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் இரண்டு மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, கிளி, வஸ்திரம். இவற்றை சூடிக்கொண்டுதான் பக்தர்களுக்கு காட்சி தருவார் ஏழுமலையான்.
மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக பாரம்பரியமிக்க திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.
இது குறித்து ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் வருகிற 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது.
இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.
திருக்குடை ஊர்வலமானது 26ஆம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பதிக் குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப்பெற குடும்பத்துடன் வாருங்கள்.
திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.