திருப்பூரில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - பட்டப்பகலில் மர்மநபர்கள் வெறிச்செயல்
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: முன் விரோதம் காரணமாக இளைஞரை நடு ரோட்டில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவராக உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் தன் சகோதரர் வெங்கடேசனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அதேபகுதியை சேர்ந்த ஒருவரின் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில் நேற்று வெங்கடேசன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் நடு ரோட்டில் வைத்து கத்தி, அரிவாள் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சராமரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெங்கடேசனை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பட்டப்பகலில் நடு ரோட்டில் இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.