ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதல்... சம்பவ இடத்திலேயே பயணி பலி - வீடியோ
திருப்பூரில் ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த ராஜேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருப்பூர்: திருப்பூர் நாச்சிபாளையத்தில் ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் உயிருக்குப் போராடி வருகிறார்.
திருப்பூர் காங்கேயம் சாலையில் நாச்சிபாளையம் என்ற ஊரில் ஆட்டோவில் ராஜேந்திரன் என்பவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது திருப்பூரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துகொண்டிருந்தது.
அந்த கார், எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ தலைகுப்புற கீழே விழுந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவில்சாலை விபத்துகள் நடக்கின்றன. இதற்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதும் சாலை விதிகளை மதிக்காததுமே காரணம் என திரும்பத் திரும்பக் கூறினாலும் மீண்டும் அதே தவறுகள் நடக்கின்றன.