தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?... 6 ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாதி
திருப்பூர்: திருப்பூரில் ஆறு ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதியை மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கத்தி, துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கூட்டாளிகள் 4 பேர் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.திருப்பூரில் உள்ள அவர் மனைவி, சகோதரரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் லாபூரைச் சேர்ந்தவர் முகமது மொஷிருதின் (எ) முஷா,25. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார். இவர், திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் கோழிப்பண்ணை பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.
இவரது மனைவி ஷாகிதா,26. இவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த தம்பதியருக்கு 2 குழந் தைகள். மங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த குழந்தையை சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.
ஆண்டிபாளையம் பகுதியில் மளிகைக் கடை வியாபாரம் செய்து வந்துள்ளார் மொஷிருதின். கடையிலேயே குடும்பத்துடன் தங்கி, யாருக்கும் சந்தேகம் அளிக்காத வகையில், மிகவும் சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். திருப்பூருக்கு வந்த பிறகு தம்பதியர் ஓரளவு தமிழ் கற்றுக்கொண்டனர்.
மளிகைக் கடை வைத்திருந்த பகுதியிலும் பீகார் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் நூற்றுக்கணக் கானோர் குடியிருந்து வந்ததால், இவர்களது நடத்தையில் எந்த சந்தேகமும் யாருக்கும் எழவில்லை என்கின்றனர் அப்பகுதியில் வசிப்பவர்கள்.
மேலும், அவரது அண்ணன் அசதுல்லா என்பவர் அப்பகுதியில் உள்ள மாட்டுத்தொழுவம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அந்த அடிப்படையில்தான் அவர் தமிழகத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு
மனைவி மற்றும் குழந்தைகள் கோழிப் பண்ணை பகுதியில் வீட்டில் இருக்க, முகமது மொஷிருதின் மட்டும் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளார். அவரை கடந்த 5ம் தேதி இரவு மேற்கு வங்க மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் விசாரணை
மொஷிருதின் வைத்திருந்த 6 சிம்கார்டு, 2 போலி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.செவ்வாய்கிழமையன்று இரவு, அவரது அண்ணன் அசதுல்லா, மொஷிருதின் குடும்பத்தார் அனைவரிடமும் மத்திய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தீவிரவாதிகளுடன் தொடர்பு
மொஷிருதின் கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் எப்போது இருந்து தொடர்பு வைத்துள்ளார், வேறு ஏதேனும் அமைப்பு களுடன் தொடர்பு வைத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை போலீசார்
கடந்த ஒரு மாதமாக இவரது நடவடிக்கைகளை கண்காணித்து தான் கைது செய்துள்ளனர். கடையில் வேலைபார்த்த உதவியாளர், மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்தினர் என யாருக்கும் இவரைப் பற்றி தெரியவில்லை என்று மத்திய உளவுத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு
மேற்கு வங்கத்தில் மொஷிருதினிடம் மாநில சிஐடி, என்ஐஏ மற்றும் ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மொஷிருதின் செல்போனை ஆராய்ந்தபோது, அவருக்கு சிரியா, ஈராக், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதை கண்டோம்.
தீவிரவாதிகளுடன் பேச்சு
மொஷிருதினுடன் தொலைபேசியில் பேசிய நபர்கள் யார், எதற்காக பேசினர் என்பதை அறிய முயன்று வருகிறோம். விசாரணையில் ஐ.எஸ் மற்றும் ஜமாத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகளுடன் மொஷிருதினுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ் (40) தலைமையில் 4 மாவோயிஸ்ட்கள் கடந்த ஆண்டு மே மாதம் 4 ம் தேதி கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் போலி முகவரி கொடுத்து சிம் கார்டு பெற்று, தொலைதொடர்பு சாதனம் பயன்படுத்தி வந்தனர்.
பனியன் தொழிலாளி
இவர்களில், ரூபேஷ், இவரது மனைவி ஷைனி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் எம்எஸ் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். ரூபேஷ் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார். ஷைனி, தங்களது கூட்டாளிகளை ஒருங்கிணைத்து திட்டம் வகுக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
தீவிரவாதிகளிடன் கூடாரமாகும் திருப்பூர்
டாலர் சிட்டி என்றும் பின்னலாடை நகரம் என்றும் அழைக்கப்படும் திருப்பூர் மாநகரில் சமீப காலமாக ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டினர் குடியேறுவது அதிகரித்து வருகிறது. இவர்களுடன், ஐ.எஸ். தீவிரவாதி, மாவோயிஸ்ட்கள் என தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களும் தங்கியிருந்து திட்டம் வகுக்கும் செயலும் அதிகரித்துவிட்டது. தமிழக காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என திருப்பூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.