சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட்
கோவை: கோவை அருகேயுள்ள காகித ஆலை அபகரிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
உடுமலையில் உள்ள பேப்பர் மில்லை மிரட்டி அபகரித்ததாக கடந்த 2011ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது உடுமலை சீனிவாசன் என்பவர் திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அன்பழகன் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் விசாரணை தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பழகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. எனவே, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அன்பழகன் நேரில் ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.