உடுமலை சங்கர் கொலை வழக்கு.. இணை ஆணையர் ஜெயந்தி நீதிமன்றத்தில் ஆஜர்
திருப்பூர்: உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் நிலநிர்வாக பிரிவு இணை ஆணையர் ஜெயந்தி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
உடுமலையில் கலப்புத் திருமணம் செய்த காரணத்துக்காக கடந்த 2015ம் ஆண்டு பொறியியல் மாணவர் சங்கர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதில் அவரது மனைவி கவுசல்யா பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து உடுமலைபேட்டை போலீஸார் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் மதன், மதனின் கூட்டாளிகளான பழநி- மணிகண்டன், திண்டுக்கல்- ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், பட்டிவீரன்பட்டி- மணிகண்டன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கவுசல்யாவின் தாய், தந்தை உள்பட 6 பேர் சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணைக்காக நிலநிர்வாக பிரிவு இணை ஆணையர் ஜெயந்தி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சங்கர் கொலை நடந்தபோது திருப்பூர் ஆட்சியராக இருந்த ஜெயந்தி சாட்சி விசாரணைக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.