நாய் மீது கல் வீசியதால் தகராறு... கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை - 2 பேர் கைது
திருப்பூர்: திருப்பூரில் நாய் மீது கல் வீசியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் ஓடக்கரை கே.வி.ஆர். நகரச் சேர்ந்தவர் சங்கர் (38). கட்டிடத் தொழிலாளியான சங்கர் சம்பவத்தன்று தனது நாயுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவா, பனியன் கம்பெனி ஊழியர்களான கோபாலகிருஷ்ணன், பால்பாண்டி ஆகியோர் சங்கர் அழைத்துச்சென்ற நாய் மீது கல் வீசியுள்ளனர். இதனை சங்கர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவா, கோபாலகிருஷ்ணன், பால்பாண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சங்கரை, அக்கம்பக்கத்தார் மீட்டு திருப்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்குப் பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பூர் போலீசார், கோபாலகிருஷ்ணன், பால்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருகிறார்கள்.
உயிரிழந்த சங்கருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.