சுடுகாட்டை காணோம்... வடிவேலு பாணியில் புகார் கொடுத்த கிராம மக்கள்
திருப்பூர்: கிணத்தை காணோம் என்று காவல் நிலையத்தில் வடிவேல் புகார் கொடுத்தது போல சுடுகாட்டைக் காணோம் என்று தாராபுரம் அருகே உள்ள நான்கு கிராம மக்கள் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள செட்டியார் தோட்டம்,கோழி பண்ணை நகர்,நாச்சி முத்துபுதூர், வளையக்காரன் தோட்டம் ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நான்கு கிராமங்களுக்கு பொதுவான சுடுகாடு,வளையக்காரன் தோட்டம் கிராமத்திலிருந்த புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இறுதிச்சடங்குகள் செய்வதற்காக அங்கு ஒரு கிணறும் வெட்டப்பட்டிருந்தது.
இன்று ஆடி அமாவாசையை ஒட்டி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கிராம மக்கள் பலர் வளையக்காரன் தோட்டம் சுடுகாட்டிற்கு வந்தனர்.
அப்போது சுடுகாட்டில் இருந்த கிணறு மூடப்பட்டு,அந்த நிலம் முழுவதும் வீட்டடி மனைகளாக மாற்றப்பட்டிருந்ததை கண்டு கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். சுடுகாட்டில் கட்டப்பட்டிருந்த சமாதிகளை கூட மிச்சம் வைக்காமல் இடித்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் ஆவேசமடைந்த நான்கு கிராம மக்களும்,ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து,தங்களது சுடுகாட்டை காணவில்லை,அதை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து இரவோடு இரவாக சுடுகாட்டை பிளாட் போட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.