மணக்க மறுத்த இளம் பெண்.. தோசைக் கரண்டியால் சூடு வைத்த காட்டுமிராண்டி வாலிபர்!
திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் முகத்திலும், கைகளிலும் தோசைக் கரண்டியால் சூடு போட்ட வாலிபரை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் திருமணம் செய்ய மறுத்த உறவுக்காரப் பெண்ணின் முகத்தில் தோசைக் கரண்டியைக் காய வைத்து சூடு போட்ட முரட்டு வாலிபரை போலீஸார் கைது சதெய்துள்ளனர். அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. 21 வயதான இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவுக்காரர் பத்மநாபன். 23 வயதான இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இருவரும் உறவு என்பதால் காதல் மலர்ந்தது. தீவிரமாக காதலித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு காதல் முறிவு ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சண்முகப்பிரியா வீட்டுக்கு வந்துள்ளார் பத்மநாபன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வலியுறுத்தியுள்ளார். ஆனால் சண்முகப் பிரியா மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த பத்மநாபன், சமையலறைக்குப் போனார். அங்கு தோசைக் கரண்டியை எடுத்து சுட வைத்து அதை எடுத்து சண்முகப் பிரியாவின் முகத்திலும், கைககளிலும் சூடு போட்டுள்ளார். வலியால் அலறித் துடித்த சண்முகப் பிரியாவை அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சண்முகப் பிரியாவின் தந்தை சக்திவேல் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பத்மநாபனை போலீஸார் கைது செய்தனர்.