திருத்தணி: அமைச்சர் "அக்ரி" கிருஷ்ணமூர்த்தி உண்டியலில் போட்ட 6 பவுன் காசுகள் மாயம்!!
சென்னை: தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, திருத்தணி முருகன் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்திய தங்க காசுகள் காணாமல் போனதால் கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சராக கடந்த மாதம் 20 ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் அக்ரி கிருஷ்ண மூர்த்தி. அமைச்சர் பதவி திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் திருத்தணி முருகனை தரிசனம் செய்த கிருஷ்ணமூர்த்தி கோவில் உண்டியலில் 6 சவரன் மதிப்புள்ள தங்க நாணயங்களை காணிக்கையாகச் செலுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் உண்டியல் என்னும் பணி தொடங்கியது.அப்போது கோவில் நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர். உண்டியல் காணிக்கைகளை எண்ணத் தொடங்கியபோதுதான் அமைச்சர் செலுத்திய தங்க நாணயங்கள் மட்டும் காணமல் போனது தெரிய வந்துள்ளது.
மற்ற காணிக்கைகள் அப்படியே இருக்கும் நிலையில், அமைச்சர் செலுத்திய தங்கக் காசுகள் மட்டும் களவு போன சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.