திருவையாறு: பிச்சை எடுத்த பணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் முதியவர்
தஞ்சாவூர்: 'கற்கை நன்றே கற்கை நன்றே... பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்பது முதுமொழி. பிச்சை எடுத்தாவது கல்வி அறிவை பெற்றுவிடுங்கள் என்பது அதன் அர்த்தம். தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தான் பிச்சை எடுக்கும் பணத்தில் உதவிகள் செய்து வருகிறார் முதியவர் ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தாலுகா ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன்,64. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மனைவி இறந்து விட்ட நிலையில் பூல்பாண்டியனை அவரது வாரிசுகள் கவனித்து கொள்ளவில்லை.
மனம் வெறுத்துப்போன முதியவர் மும்பையில் உள்ள செம்பூர் செடாநகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். அதன் பிறகு தமிழகம் வந்த அவர் மகன், மகளுடன் வசித்து வந்தார்.
அவரை அவர்கள் விரட்டி விட்டனர். இதையடுத்து பிச்சை எடுத்து தனது பசியை போக்கி வந்தார். தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணத்தை கொண்டு உதவ முன் வந்தார்.
இதனை அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை வந்த அவர் கும்பகோணம், வடக்கு மாங்குடி, கொத்தங்குடி போன்ற இடங்களில் 18 அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி உள்ளார்.
திருவையாறு அருகே விளாங்குடியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சென்ற அவர் அங்கு படிக்கும் 125 ஏழை மாணவர்களுக்கு சுமார் 8 ஆயிரம் மதிப்பில் எவர்சில்வர் தட்டு, பேனா, பென்சில், பிஸ்கட் வழங்கினார். அவரை பள்ளி தலைமை ஆசிரியை விமலாநாயகி, ஆசிரியர் சூரிய மூர்த்தி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
இதுவரையில் 18 பள்ளிகளின் மாணவர்களுக்கு பேனா, பென்சில் போன்ற எழுதுபொருட்களையும், தட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் போன்ற அத்தியாவசிய தேவை சார்ந்த உதவிகளையும் செய்துவருகிறார்.
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல். அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றார் மகாகவி பாரதியார். அவர் வாக்கின்படி பிச்சை எடுத்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் பாண்டியன்.
நான் பிச்சை எடுத்த பணத்தில் பொருட்கள் வாங்கி கொடுப்பதை மாணவர்கள் ஏற்றுக் கொண்டது மன நிம்மதி என்றும் பூல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருவெள்ளத்தின் போது தன்னிடம் இருந்த பணத்தைக்கொண்டு உதவ முயன்றதாகவும், ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். சாகும் வரை தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு இது போன்ற உதவிகள் செய்யப்போவதாகக் தெரிவிக்கிறார் பூல் பாண்டியன். இவரது கல்வித்தொண்டு திருவையாறு பகுதி மக்களை நெகிழவைத்துள்ளது.