திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் துப்புரவாளர் பிரேத பரிசோதனை செய்த அவலம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் துப்புரவு பணியாளர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
Recommended Video
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் துப்புரவு பணியாளர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளதை அடுத்து மருத்துவர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
துப்பரவு பணியாளர்
அப்போது மருத்துவர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த துப்புரவு பணியாளரும் மருந்தாளுநரும் திறந்த வெளியில் பிரேத பரிசோதனை செய்தனர். இதனால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் இன்பசேகரன் கூறுகையில் திறந்த வெளியில் பிரேத பரிசோதனை செய்தது குறித்து விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
துப்புரவு பணியாளர் இடமாற்றம்
இந்நிலையில் துப்புரவு பணியாளர் பிரேத பரிசோதனை செய்தது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ்வ பிரியா அரக்கோணம் மருத்துவமனைக்கும், துப்புரவு பணியாளர் அப்பாவு, மருந்தாளுநர் ருக்மாங்கதன் ஆகியோர் முறையே திருத்தணி மற்றும் ஆவடி அரசு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மக்கள் அதிர்ச்சி
இந்த உத்தரவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் தயாளன் பிறப்பித்தார். திறந்தவெளியில் துப்புரவு பணியாளர் பிரேத பரிசோதனை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.