வெறும் சோறா.. தொட்டுக்க ஒன்னும் இல்லையா.... உறவுப் பெண்ணை வெட்டிக் கொன்ற நபர்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள எதுவும் வைக்காததால், சாப்பாடு பரிமாறிய பெண்ணை உறவினர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சடயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி (33). இத்தம்பதி திருவள்ளூர் அடுத்த கனகம்மாசத்திரம் மாதா கோயில் தெருவில், வாடகை வீட்டில் வசித்தபடி, சீடை, முறுக்கு, வத்தல் ஆகியவற்றைத் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தனர்.
வியாபார உதவிக்காக தங்கராமன், தனது உறவினரான செல்லத்துரை (37) என்பவரை தனது வீட்டில் தங்க வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை செல்லத்துரைக்கு சாப்பாடு பரிமாறிய கலைச்செல்வி, சைடிஷ் எதுவும் வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த செல்லத்துரை, வீட்டில் இருந்த கத்தியால், வீட்டின் பின்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்த கலைச்செல்வியை குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், நேராக காவல் நிலையம் சென்று செல்லத்துரை சரணடைந்தார். செல்லத்துரையைக் கைது செய்த போலீசார், கலைச்செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லத்துரை அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள சைடிஷ் எதுவும் வைக்காததால் கொலை செய்தேன் எனவும், கூலி வழங்காததால் கொலை செய்தேன் எனவும் முன்னுக்குப்பின் முரணாக' கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.