கங்கை கரையில் நிறுவ கொண்டு போன திருவள்ளுவர் சிலை இப்படி கேட்பாரற்று கிடக்குதே
சென்னை: கங்கைக்கரையில் நிறுவதற்காக கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பூங்கா ஒன்றில் கருப்பு நிற கவரால் சுற்றி கேட்பாற்று கிடப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தமிழர் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்றும் திருவள்ளுவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல பெருமைதான் என்றும் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் சிலை அவமதிப்பு விவகாரத்தில் உத்தராகண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழறிஞர், தமிழ் அமைப்புகள் இணைந்து சிலையை மீட்டெடுக்கும் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.