திருவண்ணாமலை: போர்வெல்லில் சிக்கிய குழந்தை 25 மணி நேரத்திற்குப் பின் சடலமாக மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கிடாம்பாளையத்தில் துரை என்பவரின் 3 வயது மகன் சுஜித், அந்த பகுதியில் ஜெயபால் என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில், நேற்று மாலை 4 மணியளவில் விழுந்தான்.
160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் தற்போது 45-வது அடியில் சிறுவன் சிக்கிக் கொண்டான். சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
நேற்றிரவு 11 மணிக்கு வந்த மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், நவீன கருவிகளுடன் சிறுவனை மீட்கப் போராடினர். சிறுவனுக்கு குழாய் முலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. ஆனால் ரோபோ மூலம் மீட்கும் பணி தோல்வியடைந்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப்பணியை பார்வையிட்டனர். இதனிடையே, ஆழ்துளை கிணற்றின் உரிமையாளர் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து ஆழ்துளை கிணற்றருகே 6 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டது. 47 அடிவரை பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டு குழந்தையின் உடலை மீட்டனர். உடனடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
பெற்றோர்கள் கதறல்
குழந்தை உயிரிழந்துவிட்டதை அறிந்த உடன் அங்கிருந்த பெற்றோர்களும், உறவினர்களும், கதறி அழுத சம்பவம் அனைவரின் கண்களையும் குளமாக்கியது.
தொடரும் சம்பவங்கள்
கடந்த 10 தினங்களுக்குள் தமிழகத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலட்சிய நிகழ்வுகள் அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள், அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சங்கரன்கோவில் சிறுவன்
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே 3 வயது சிறுவன் திங்கட்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
உயிரிழந்த சிறுமி
கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதியன்று விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.