திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அரோகரா முழக்கமிட்ட பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீப திருவிழாவை முன்னிட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர்.
பஞ்ச பூதங்களில் நெருப்பு தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலைதான். நினைத்தாலே முக்தி தருவது இந்த திருத்தலம் தான்.
கார்த்திகை தீபத் திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதிகாலையில் பரணி தீபம்
10ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் கோவிலில் ஏற்றப்பட்டது.
வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபத்தை சிவாச்சாரியர்கள் ஏற்றினர் இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு அருணாசலேசுவரரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கிரிவலம்
தீபத்திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
எங்கும் பக்தர்கள் கூட்டம்
கார்த்திகைதீப திருவிழாவை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்திருப்பதால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
அனைவரும் மகாதீபம் ஏற்றப்படுவதைக் காண குவிந்துள்ளனர்.
பக்தர்கள் தரிசனம்
மலை மீது மகாதீபம் ஏற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொடி மரத்தின் முன்பு எழுந்து காட்சியளித்தார். கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருநாளன்று மட்டுமே அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுடன் இணைந்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவது வழக்கம். அர்த்தநாரீஸ்வரரை, கோயில் முன்பு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்
மகாதீபத்தை தரிசித்த பக்தர்கள்
மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை எட்டியது. மலை மீது தீபம் ஏற்றப்பட்ட உடன் ஏராளமானோர் தங்களின் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். மலைமீது ஏற்றப்பட்ட தீபம் 11 நாட்களுக்கு எரிந்து கொண்டிருக்கும். இதனை பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.