திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் பிரசித்தி பெற்ற அக்னி தலம் திருவண்மாமலை என்றழைக்கப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், சமேத முருகர் வள்ளி தெய்வானை, சமேத அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் தங்க கொடி மரத்தின் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர், அதனை தொடர்ந்து சுவாமிநாத குருக்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, ஓதுவார்கள் தேவாரம் பாட, மங்கல இசையுடன் 72 அடி உயர கொடிமரத்தில் காலை 6.40க்கு விருச்சிக லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இந்த கொடியேற்று நிகழ்ச்சியில், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான அண்ணாமலையார் பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை முட்ட அரோகரா கோஷங்களை எழுப்பினர். வரும் டிசம்பர் 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதுதான் இந்த விழாவின் உச்ச நிகழ்ச்சியாகும்.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம், 9 கோபுரங்களும், கோயிலில் உள்ள அனைத்து சந்நதிகளும், தங்க கொடிமரம், தல விருட்சமான மகிழ மரம், ஆகியவை வண்ண மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளன. திருவண்ணாமலை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.