சித்திகள் அருளும் சித்ரா பெளர்ணமி... பக்தர்களால் நிரம்பி வழிந்த திருவண்ணாமலை!
திருவண்ணாமலை: சித்ரா பெளர்ணமியினை முன்னிட்டு கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது திருவண்ணாமலை சிவஸ்தலம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மலையே சிவனாக வணங்கப்படுவதால் பெளர்ணமி நாட்களில் மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குறிப்பாக சித்திரை பெளர்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் ஓராண்டு முழுவதும் கிரிவலம் வந்ததற்கான பலன் கிடைப்பதாக புராணங்கள் கூறுகிறது.
எனவே, திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டு சித்திரை பெளர்ணமி தினத்தன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
சித்திரை பெளர்ணமி திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
கோயில் வளாகம், கிரிவலப் பாதை உள்ளிட்ட நகரின் அனைத்துத் தெருக்களும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன.