திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: டிச. 3ல் கொடியேற்றம்- டிச.12ல் மகாதீபம்
திருவண்ணமலையில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12ம் தேதி மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை: சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு அண்ணாமலையார் கோயிலில், துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை நவம்பர் 30ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை நவம்பர் 30ஆம் தேதி தீபத் திருவிழா காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதி வர உள்ளார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம், டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
தீபத்திருவிழா கொடியேற்றம்
டிசம்பர் 3ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 8ஆம் தேதி முற்பகலில் 63 நாயன்மார்கள் மாட வீதியுலா நடைபெறவுள்ளது.
மகா தேரோட்டம்
டிசம்பர் 9ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. முதலில், விநாயகர் தேரோட்டம் காலை 6.05 - 7.05 மணிக்குள் புறப்படுகிறது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத முருகன், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, மற்றொரு தேர் புறப்படும். காலை 6.30 மணியளவில் தொடங்கும், மகா தேரோட்டம் நள்ளிரவு நடைபெறும்.
தீபத்திருவிழா
அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர், அன்று மாலை ஐந்து மணியளவில் தீப தரிசன மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கிறார். அதனைத் தொடர்நது 2,668 உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தெப்ப உற்சவம்
இதையடுத்து, 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் டிசம்பர் 16ஆம் தேதி மாட வீதியுலா வந்ததும், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு 2,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.