திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கம்!
திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழாயையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதை லட்சகணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வணங்கி மகிழ்ந்தனர்.
கடந்த மாதம் 26ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம்நாளான நேற்று பகலில் சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபத் திருவிழாவின் உச்சக்கட்டமான மகா தீப பெருவிழா இன்று நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபம் ஏற்றப் பட்ட்து. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. இதை நேரில் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர்.
மலையில் மகா தீபம் ஏற்றும்போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளிப்பார். அந்த ஆனந்த தாண்டவம் இன்று நடந்தது.
முன்னதாக மகா தீப கொப்பரை நேற்று அதிகாலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும்.
இதற்கிடையே நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், திருவண்ணாமலையில் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை எச்சரித்தது. அதன்படி, திருவண்ணாமலை கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில், 100 கமாண்டோ வீரர்கள் மற்றும் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, 2 ஆளில்லா விமானங்கள், நவீன கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன் ஆகியவற்றின் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
46 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 23 இடங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. காணாமல் போன குழந்தைகள் குறித்த விபரங்களை போட்டோவுடன் அறிவிக்க, 34 இடங்களில் அகன்ற திரைகள் அமைத்து ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகருக்கு வரும் 9 முக்கிய சாலைகளிலும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, நகருக்குள் வரும் வாகனங்கள் பற்றிய விவரங்கள் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னையில் இருந்து மட்டும் 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. மேலும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.