திருவாரூரில் பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டம் தொடங்கியது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழி தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே பெரியது. கோவிலின் ஆழித் தேரோட்டம் இன்று ஆரம்பித்துள்ளது.
தேரோட்டத்தை ஒட்டி, தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன், நேற்று முன்தினம் இரவு, தேருக்கு எழுந்தருளினார். தியாகராஜ சுவாமியுடன், விநாயகர், சுப்ரமணியர் சுவாமிகள் தனித்தனி தேருக்கு எழுந்தருளினர்.
நேற்று காலை, 6:45 மணிக்கு, விநாயகர் தேர்; 7:00 மணிக்கு, சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக, காலை 10:00 மணிக்கு, கீழ வீதியை வந்தடைந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை, ஆழித் தேரோட்டம், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை ஒட்டி, இன்று, திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஆழித்தேர் ஆடி அசைந்து பவனி சென்றது.