திருவிடந்தையில் நாளை ராணுவ கண்காட்சி- சென்னை-புதுச்சேரி போக்குவரத்து மாற்றம்
நாளை ராணுவ கண்காட்சி நடைபெறுவதால் விழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை: திருவிடந்தையில் நாளை நடைபெறும் ராணுவ கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவினையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் வருகிற 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ராணுவக் கண்காட்சி நடைபெறவுள்ளது. நான்கு நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.
ரூபாய் 480 கோடி செலவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 60 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக வருகிற 12ம் தேதி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.
இந்த கண்காட்சிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் விமானப்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராணுவ தளவாட கண்காட்சி நடப்பதையொட்டி, சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்தில் நாளை முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு நேரிடையாக செல்லும் வாகனங்கள் அக்கறை சோதனை சாவடியில் இருந்து ராஜிவ் காந்தி சாலை வழியாக திருப்போரூர் பூஞ்சேரி வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரைசாலை வழியாக சென்னைக்கு வரும் வாகனங்கள் வெங்கம்பாக்கத்தில் இருந்து பூஞ்சேரி வழியாகவும், ஜிஎஸ்டி சாலை வழியாகவும் சென்னைக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணுவ கண்காட்சிக்கு வாகனங்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதியே இந்த மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த போக்குவரத்து மாற்றம் ஏப்ரல் 11 தேதியில் இருந்து 14ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.