நீட்.. கப்-சிப் கட்சிகளுக்கு மத்தியில் களமிறங்கி சாதித்த கம்யூனிஸ்ட்! ஹீரோவான டிகே ரங்கராஜன்
Recommended Video
மதுரை: தமிழில் நீட் தேர்வை எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஎஸ்இ தப்பும் தவறுமான மொழிபெயர்ப்புடன் கூடிய வினாக்களை வழங்கிய வழக்கில் ஹைகோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன் இந்த வழக்கை மதுரை ஹைகோர்ட் கிளையில் தொடர்ந்தார்.
கடந்த 6ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு இந்த தீர்ப்பை இன்று பிறப்பித்தது. மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்கம் தவறாக இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேலி செய்தார்கள்
ரங்கராஜன் இந்த வழக்கை தொடர்ந்தபோது, தேர்வு முடிந்த நிலையில், இதில் கோர்ட் தலையிடாது என்றும், இது தேவையற்ற வழக்கு என்றும் கேலி செய்தவர்களே அதிகம். ஆனால், கிராமப்புறத்தை சேர்ந்த, தமிழில் மட்டுமே புலமைத்தன்மை பெற்ற ஏழை மாணவர், மாணவிகள், இந்த தீர்ப்பைதான் மலைபோல நம்பி காத்திருந்தனர். அவர்களுக்காகத்தான் ரங்கராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.
சிபிஎஸ்இ அராஜகம்
இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, அவ்வப்போது, சிபிஎஸ்இ நடவடிக்கை குறித்து காட்டமாக ஹைகோர்ட் கிளை கருத்து கூறியது. அப்போது மாணவர்களுக்கு லேசான நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ அளித்த பதில்கள் மிகவும் மெத்தனமானவை. மாணவ, மாணவிகளே வழக்கு தொடராதபோது, யாரோ ஒருவர் வழக்கு தொடர்ந்ததை கண்டுகொள்ள வேண்டாம் என்று அலட்சியமாக பதிலளித்தது சிபிஎஸ்இ.
குட்டு வைத்த ஹைகோர்ட்
இந்த அலட்சியத்திற்கு தக்க நேரத்தில் குட்டு வைத்தது ஹைகோர்ட் மதுரை கிளை. ஆம்.. சிபிஎஸ்இ தவறு செய்தால் யாரும் கேட்க கூடாது? நீங்கள் சர்வாதிகார அமைப்பா என ஹைகோர்ட் கேட்ட கேள்விக்கு சிபிஎஸ்இயிடம் பதில் இல்லை. 49 தவறான கேள்விகளை உரிய ஆதாரத்தோடு எடுத்து வைத்தது ரங்கராஜன் தரப்பு. இதன் பலனாக தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.
ஆக்கப்பூர்வ கட்சி
நீட் அநியாயத்தால் மருத்துவர் கனவில் இருந்த மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும் பெரும் அவதிக்குள்ளானபோது ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு உண்மையான ஒரு நிவாரணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார் ரங்கராஜன். மற்ற கட்சிகள் இதுபோல செயல்படவில்லை. திமுக 'வழக்கம்போல' நீட்டுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அடையாளத்திற்கு நடத்திவிட்டு அமைதியானது. அதிமுக வழக்கம்போல, மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்ற தங்கள் டிரேட் மார்க் வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. பாஜகவோ, நீட் ஒரு நியாயமான தேர்வு என சிரிக்காமல் சீரியசாக பேசிக்கொண்டிருந்தது.
மாணவர்கள் ஹீரோ ரங்கராஜன்
ஆனால், இந்த பெரிய கட்சிகள் உள்பட யாருமே செய்யாத ஒரு செயலை, தேவையில்லாமல், வாய் சவடால் விடாமல் உருப்படியாக செய்து முடித்துள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின், டி.கே.ரங்கராஜன். இவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருந்தது. ஏழை, எளியவர்களுக்கு உறுதுணையாக இருப்ப்தையே கொள்கையாக கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை என்ன என்பதை இந்த வழக்கு மீண்டும் ஒருமுறை மக்கள் முன்பாக நிரூபித்துக் காட்டியுள்ளது. 24,000 மாணாக்கர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டுள்ளது. பிற கட்சிகள், பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், ஏழை, எளிய, குரல் அற்றவர்களுக்கான குரலாக செயல்படுவது கம்யூனிஸ்டுகள்தான் என்பதையும் இந்த தீர்ப்பு நிரூபிப்பதாக உள்ளது.