கஜானாவை காலி செய்ய தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக்கேடு.. டிகேஎஸ் இளங்கோவன்!
அரசு கஜானாவை காலி செய்ய தலைமைச் செயலகத்தில் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக்கேடானது என டிகேஎஸ் இளங்கோவன் சாடியுள்ளார்.
சென்னை: அரசு கஜானாவை காலி செய்ய தலைமைச் செயலகத்தில் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக்கேடானது என டிகேஎஸ் இளங்கோவன் சாடியுள்ளார். கட்சிப் பிரச்சனைகளை தீர்க்க அதிமுகவினர் கூவத்தூர் நட்சித்திர விடுதியில் ஆலோசனை நடத்தலாம் என்று கூறிய அவர், அதிமுகவுக்குள் நடக்கும அரசியல் கூத்துகளை தலைமைச் செயலகத்தில் பேசுவதற்கு கடும் கண்டம் தெரிவித்தார்.
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்டு வரும் கூச்சல் குழப்பங்களை இந்திய அரசியல் உற்று நோக்கி வருகிறது . அதிமுக பிரமுகர்கள் அவ்வப்போது கட்சிப்பிரச்சனைக் குறித்து முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசித்து வருகின்றனர்.
தலைமைச் செயலகத்துக்கு வெளியே அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து எதிரணியினருக்கு பதிலளித்து வருகின்றனர். இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தலைமைச் செயலகம் அதிமுகவின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து தலைமைச் செயலகம் அதிமுகவின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலமைச்சரும் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய இடத்தை அதிமுகவிற்குள் நடக்கும் அரசியல் கூத்துக்களுக்கு பஞ்சாயத்து செய்யவும், அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.
வெட்கக்கேடானது
தமிழகமே இன்றைக்கு மிகப்பெரிய போராட்டக் களமாக மாறியிருக்கிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளை மூடக் கோரி தாய்மார்கள் போராடுகிறார்கள். வறட்சியின் கொடுமையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை.
அமைச்சர்கள் கூடிப் பேசவில்லை. ஆனால் ஒன்றாக இணைந்து ஊழல் செய்து விட்டு இப்போது பிரிந்து நிற்கும் இரு ஊழல் அணிகளும் மீண்டும் ஒருங்கிணைந்து அரசு கஜானாவை காலி செய்வதற்கு தலைமைச் செயலகத்தில் சந்திப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் வெட்கக் கேடானது.
குழிதோண்டி புதைப்பு
ஏற்கனவே அதிமுக எம்.பி.க்களின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற போது அதை தலைவர் கலைஞர் அவர்களே கடுமையாக கண்டனம் தெரிவித்தார். ஆனாலும் அதிமுகவினர் அரசியல் நாகரிகங்களையும், அரசியல் சட்ட மாண்புகளையும் குழி தோண்டி புதைத்து விட்டு இது போன்ற கட்சிக் கூட்டங்களை தலைமைச் செயலகத்தில் நடத்துவதை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடிதடிக்கு தீர்வு..
அது மட்டுமின்றி, மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை அவர்கள் கோட்டைக்கு சென்று முதலமைச்சரை சந்தித்து அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் அதிமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆலோசனை நடத்தலாம்.
கூவத்தூரில் பேசலாம்
இல்லாவிட்டால் கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் கூட அமர்ந்து ஆலோசனை நடத்தலாம். தயவு செய்து தமிழகத்தின் நிர்வாக சின்னமாக இருக்கும் தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சிக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை தீர்ப்பதற்கான இடமாக மாற்றாதீர்கள் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.