கருணாநிதி 2 நாட்களுக்கு மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்- டிகேஎஸ் இளங்கோவன்
கருணாநிதி இருநாட்களுக்கு மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை: கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இரு நாட்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காய்ச்சல் மற்றும் நோய் தொற்று குறைந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. பின்னர் அவர் வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் சூழ்ந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார்.
அவருக்கு ரத்த அழுத்தம் சீராகிவிட்டது. கருணாநிதி இன்னும் இரு நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். அதன் பின்னர் வீடு திரும்புவார் என்றார் டிகேஎஸ் இளங்கோவன்.