திராவிட நாடு சிந்தனை தீவிரவாதமா.. இந்துத்துவம்தான் அபாயகரமானது- தமிழிசைக்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி
இந்தியாவிற்கு இந்துத்துவம்தான் அபாயகரமானது என்று தமிழிசைக்கு திமுக ராஜ்ய சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: திராவிட நாடு என்பது தீவிரவாத சிந்தனை என்று பாஜக தலைவர் தமிழிசை சொன்னதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. இதனை தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்டவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் "திராவிட நாடு" என்ற சொல் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை, இது ஒரு தீவிரவாத சிந்தனை என்று கூறினார்.
பதிலடி
இந்நிலையில், தமிழிசை கருத்து தவறானது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். மாநில அரசுகளின் உரிமையை மீறும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாநில அரசின் உரிமை
இதுபோன்ற ஒரு வழக்கில், மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதை அனுமதிக்க முடியாது என்று சுப்ரீட் கோர்டே சொல்லி இருக்கிறது. காரணம் அரசியலமைப்பு சட்டத்தின் படி இது மாநில அரசின் உரிமையாகும்.
பாசிசப் போக்கு
குறிப்பாக ரம்ஜான் மாத நோன்பு தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசின் இந்துத்துவ பாசிசப் போக்கை காட்டுகிறது. இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
அபாயம்
பாஜகவினர் எதிர்ப்பார்க்கின்ற ஒன்றுபட்ட இந்துத்துவ பாசிசம்தான் இந்தியாவிற்கு அபாயகரமானது. பல்வேறு பண்பாடுகளை காப்பாற்றியிருக்கின்ற இந்தியாவை இவர்கள் கெடுக்கப் பார்க்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருங்குணத்திற்கு ஆபத்தை விளைவிக்க மத்திய அரசு முற்பட்டிருக்கிறது என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.