சிவி சண்முகம் ஒரு பக்கம் மீசையுடன் மொட்டையே அடிக்க நேரிடுமே- டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி
அமைச்சர் சிவி சண்முகம் ஒரு பக்கத்து மீசையுடன் சேர்த்து மொட்டையே அடிக்க நேரிடும் என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை: காவிரி விவகாரத்தில் திமுகவின் பங்கு குறித்து நாங்கள் கூறினால் அமைச்சர் சிவி சண்முகம் ஒருபக்கத்து மீசையுடன் சேர்த்து மொட்டையே அடிக்க நேரிடும் என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மறுக்கப்படுவதற்கு யார் காரணம் என திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குறை கூறிக் கொள்கின்றனர்.ஆனால் தீர்வு என்னவோ கிடைத்தது போல் தெரியவில்லை.
1972-ஆம் ஆண்டு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள இந்திரா அரசுக்கு பயந்து கொண்டு உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதுபோல் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து அதிமுக அரசு வாதாட வைக்கவில்லை என்று திமுகவும் குறை கூறி வருகிறது.
ஸ்டாலின்
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில் காவிரி பிரச்னையை தீர்க்க திமுக என்ன செய்தது என்பதை ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஏதேனும் ஒரு தகவலை ஸ்டாலின் கூறினால் ஒரு பக்க மீசையை அதிமுகவினர் எடுத்துக் கொள்வர்.
பதிலடி
மத்தியில் அங்கம் வகித்த போது காவிரி விவகாரத்தில் என்ன செய்தது திமுக? என்று சரமாரி கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிகேஎஸ் இளங்கோவன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
துரோகம்
இதுகுறித்து அவர் கூறுகையில் காவிரி விவகாரத்தில் திமுக எடுத்த நடவடிக்கைகளை கூறினால் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒருபக்க மீசை மட்டுமல்ல முழுமையாக மொட்டை அடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவுக்கு அதிமுக தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது என்று தெரிவித்தார்.
தயாராக இல்லை
சிவி சண்முகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் கனிமொழி கூறுகையில் அதிமுகவினரை மீசையில்லாமல் பார்ப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று கனிமொழி தெரிவித்தார்.