காவிரியில் துரோகம்… மத்திய அரசை கண்டித்து த.மா.கா. மாபெரும் போராட்டம்: வாசன் எச்சரிக்கை
சென்னை: காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான காவிரி நதி நீர் பங்கீட்டில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட்டு காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றி தமிழகத் விவசாயிகளின் நலனை பாதுக்காக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கி இருக்கிறது. முறையாக சரியாக தண்ணீர் கொடுக்க வேண்டிய காலத்தில் நீதிமன்றத்தை அவமரியாதை செய்த கர்நாடக அரசை கண்டித்தும், காலக்கெடுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும், 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை கோர்ட் உத்தரவை மீறாமல் காவிரி நீரை கொடுக்க வலியுறுத்தியும் தமாகா சார்பில் டெல்டா மாவட்டத்தில் ஓரிரு நாட்களில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.