சட்டசபை தேர்தலில் தமாகாவை தவிர்க்க முடியாது... 2016ல் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே வாசன்
சென்னை: ஆளும்கட்சி தவறு செய்யும்போது கண்டிப்பதும், நல்லது செய்யும்போது பாராட்டுவதும்தான் த.மா.காவின் பாணி. எதிர்க் கட்சி என்றாலே எதிரிக் கட்சியாக இருக்கத் தேவையில்லை என்று அதிரடியாக பேசுகிறார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன்.
2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி, உதிரிக்கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கிட்டத்தட்ட 234 தொகுதிகளிலும் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டார் டாக்டர் ராமதாஸ். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினோ 80 சதவிகிதம் சட்டசபை தொகுதிகளில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை முடித்துவிட்டார்.
மக்கள் நலக்கூட்டணியோ, தமாகா, தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டியை சமாளித்து கூட்டணியை முடிவு செய்வதற்குள் சட்டசபை தேர்தலே வந்து விடும்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனோ, சட்டசபை தேர்தலில் நாங்கள் தவிர்க்க முடியாத கட்சி என்று கூறிவருகிறார். அதிமுக உடன் தமாகா இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவினாலும் விஜயகாந்த் உடன் நட்பில் உள்ள ஜி.கே.வாசன், அவருடன் கலந்து ஆலோசித்தே முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. தங்களின் கூட்டணி பற்றிய அறிவிப்பை பிப்ரவரி மாதம்தான் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
முதல்வரிசை கூட்டணி
தமாகா மக்கள் விரும்பும், முதல் வரிசை கூட்டணியில் இருக்கும். காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் எந்த கூட்டணியில் இருக்கும் என்பது பற்றி கவலையில்லை. எங்களது இலக்கு வெற்றி மட்டுமே. இதன் அடிப்படையில் தேர்தலை சந்திப்போம். பாஜகவுடன் எந்த உறவும் இல்லை. 2016 பிப்ரவரி வரை எங்களது வியூகம் கட்சியைப் பலப்படுத்துவதில் மட்டுமே இருக்கும்.
மக்கள் விரும்பும் கட்சி
மக்கள் எண்ணங்களை தமாகா தொண்டர்கள் மூலமாகத் திரட்டி வருகிறோம். தேர்தலுக்கு முன்னதாக, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்து மக்களும் விரும்பும் கட்சியாக இருக்கிறது. மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாக த.மா.கா கூட்டணி அமையும்.
வெற்றிக்கூட்டணி
2016ம் ஆண்டு பிப்ரவரி 3வது வாரத்தில்தான் தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கு முன்னதாகக் கூட்டணி குறித்து சொல்வதற்கு இது சரியான நேரம் அல்ல. தமாகா எடுக்கும் முடிவு, கூட்டணியில் அதைச் சார்ந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படுத்துவதாக இருக்கும்.
வைகோவிற்கு நன்றி
கூட்டணிக்கு அழைப்பு விடுத்த வைகோ மற்றும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மக்கள் நலக் கூட்டணியில் யார் யார் இடம்பெற முடியும். யாருக்கெல்லாம் இடமில்லை என்பதை அந்தக் கூட்டணி வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது. த.மா.கா தேர்தல் வியூகம், கூட்டணி முடிவுகள் எல்லாம் நான் ஏற்கெனவே கூறியபடி, எனது சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பேன்.
முடிவு பின்னர் அறிவிப்போம்
ஆளும்கட்சி தவறு செய்யும்போது கண்டிப்பதும், நல்லது செய்யும்போது பாராட்டுவதும்தான் தமாகாவின் பாணி. எதிர்க் கட்சி என்றாலே எதிரிக் கட்சியாக இருக்கத் தேவையில்லை. இந்த ஆட்சியின் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டித்தான் வருகிறோம். தேர்தல் நேரத்தில் எங்கள் முடிவை அறிவிப்போம் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார் ஜி.கே.வாசன்.