மது இல்லாத தமிழகம்... கையெழுத்து இயக்கம் தொடங்கிய தமாகா ஜி.கே.வாசன்
சென்னை: மதுவிலக்கை ஒரே அறிக்கையின் மூலம் உறுதி படுத்தாவிட்டாலும் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். உடனடியாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், தெருக்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் முதல் கையெழுத்தினைப் போட்டார். அக்டோபர் 2ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அதன் பிறகு அந்த படிவங்கள் ஆளுநரிடம் மனுவாக அளிக்கப்பட உள்ளது.
கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்க படிவத்தில் ஜி.கே.வாசன் முதல் கையெழுத்தைப் போட்ட பின்னர் தொண்டர்களிடமும், பொது மக்களிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மது இல்லாத தமிழகமே எங்கள் நோக்கம். இதற்காகவே இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார்.
படிப்படியாக அமல்
மதுவிலக்கை ஒரே அறிக்கையின் மூலம் உறுதி படுத்தாவிட்டாலும் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். உடனடியாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், தெருக்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும்.
லைசென்ஸ் பறிமுதல்
சமூக அவலங்களுக்கு அடிப்படையாக இருக்கும் மதுவை ஒழிப்பதுதான் முதல் கடமை என்பதை அரசாங்கம் உணர வேண்டும். பார்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கட்டாயம் லைசென்சை பறிமுதல் செய்ய வேண்டும்.
அரசு அறிவிப்பு
சசிபெருமாள் மரணத்துக்கு பிறகு மது விலக்கு பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே விரைவில் அரசிடம் இருந்து நல்ல அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்.
வன்முறை கூடாது
மதுக்கடைகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது வன்முறையில் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் நினைத்தால் சாதிக்க முடியும். நல்ல வழியில் மக்களை சந்தித்து மதுவின் தீமைகள் பற்றி வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். மது இல்லாத தமிழகத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும் பாடுபடுவோம் என்றார்.