டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடினால் தடியடியா? கொந்தளிக்கும் ஜி.கே. வாசன்
தமிழகத்தில் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்துப் போராடினால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவது எந்த வகையில் நியாயம் என்று கொந்தளித்துள்ளார் த.மா.கா. ஜி.கே. வாசன்.
நாகர்கோவில்: குமரி மாவட்டம் கருங்கலில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " டாஸ்மாக் கடையை மூடக்கோரி தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டாஸ்மாக் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவதை அரசு கைவிட வேண்டும். தனிநபர் உணவு விஷயத்தில் அரசு தலையிடக்கூடாது.
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது அவரது உரிமை. அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற 100 நாட்களில் எந்த சாதனையும் செய்யவில்லை. நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பாஜக அ.தி.மு.க.வை மிரட்டுகிறதா? என்பது ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர்தான் தெரிய வரும்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உண்மை வெளிவந்தே தீரும். தமிழகத்தில் இனிவரும் காலம் கூட்டணி காலம்தான். தனித்து யாரும் வெற்றி பெறமுடியாது. நாங்கள் தேர்தல் நேரத்தில் சரியான கூட்டணியை தேர்வு செய்து போட்டியிடுவோம்." இவ்வாறு அவர் கூறினார்.