வாசன் யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு.. ஆனா எப்ப முடிவெடுப்பாருன்னு அவருக்கே தெரியாது!
சென்னை: தேமுதிக கூட்டணியால் நாம் பெரிய பாதிப்பை சந்தித்து விட்டோம். அந்தக் கூட்டணி இனியும் நமக்குத் தேவையா என்று யோசிக்க வேண்டும். கூட்டணியை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனராம். வழக்கம் போல எந்தப் பதிலையும் அளிக்காமல் மெளனமாக வாசன் இதைக் கேட்டுக் கொண்டாராம்.
காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேறி தனது தந்தை ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் தொடங்கினார் வாசன். அவர் மீது ஓரளவு எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால் அவரது படு நிதான போக்காலும், அரசியல் முடிவாலும் இன்று தமாகா சிதைந்து போய்க் காணப்படுகிறது. எந்தப் பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தாமல் அமைதியாகப் போய் விட்டது இந்த தமாகா புயல்... காரணம் வைகோ புயல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அமைதியாக ஒரு ஆலோசனை
இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள், ஜி.கே.வாசனைச் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது கட்சி ஏன் இவ்வளவு மோசமாக தோற்றது என்பது குறித்து அவர்களுடன் பேசியுள்ளார் வாசன்.
26 வேட்பாளர்கள்
மேலும் தனது கட்சி சார்பில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களையும் அழைத்துப் பேசியுள்ளார் வாசன். அவர்களிடம் உங்களது தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார் வாசன். அப்போது பலரும் கூட்டணி சரியில்லை என்ற பதிலையே கூறியுள்ளனர்.
ஒத்துழைப்பு இல்லை
கூட்டணி கட்சிகளிடம் ஒத்துழைப்போ, ஒருங்கிணைப்போ இல்லை. இந்தக் கூட்டணி தேறாது. இனியும் இதில் நாம் நீடிக்க வேண்டுமா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறி விட்டனராம்.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவோம்
இந்தக் கூட்டணியை விட்டு முதலில் வெளியேற வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதைச் சந்திக்க நாம் தயாராகா வேண்டும்.
காங்கிரஸைப் பாருங்க
காங்கிரஸைப் பாருங்க, 41 இடங்களை வாங்கி 8 இடங்களில் வென்றுள்ளனர். குறைந்த இடம் என்றாலும் கூட அவர்களுக்கென்று சட்டசபையில் 8 பேர் உள்ளனர் என்பதுதான் முக்கியம். எனவே நல்ல கூட்டணியை, வலுவான கூட்டணியை நாம் அமைக்க வேண்டும். நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினராம்.
பேசாமல் இருக்காரே!
கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் இப்படிக் கூறியபோது வாசன் பதில் ஏதும் சொல்லவில்லையாம். விரைவில் அவர் நல்லதொரு முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர்.