தென்னந்தோப்பு சின்னத்துகாரங்களாம்... அதான் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் மீது இப்படி பாய்ச்சலாம்!
சென்னை: தென்னை மரத்தில் ஆண்டுதோறும் சிறகெடுப்பு என்ற கழிவுகள் அகற்றப்படுவதுபோல தற்போது பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் போன்ற கழிவுகள் விலகி உள்ளன என தமாகாவின் மாநில செயலர் விடியல் சேகர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக விடியல் சேகர் கூறியதாவது:
மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்த நாளில் வாசனுடன் பீட்டர் அல்போன்ஸும், விஸ்வநாதனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மூப்பனார் உயிருடன் இருக்கும் போது நீங்கள் ஓய்வு எடுங்கள். உங்கள் மகனை தோளில் தூக்கி நாங்கள் சுமக்கிறோம் என்று சொன்னவர்தான் பீட்டர் அல்போன்ஸ்.
இப்போது மதவாதம், காலம் தாழ்த்தி எடுத்த முடிவு என்றெல்லாம் கூறி தி.மு.க.வுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுவது எதற்கோ அவர் விலை போய் விட்டார் என்பதையே காட்டுகிறது. 40 முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் இரண்டு தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், 15 முன்னாள் எம்.பி.க்கள், த.மா.கா. விலேயே இருக்கிறார்கள்.
பீட்டரை வளர்த்து அழகு பார்த்தவர் மூப்பனார். அவரைப் போலவே வாசனும் எளிய தலைவராக உள்ளார். ஆனால் பதவி ஆசையில் பீட்டர் அல்போன்ஸ் துரோகம் செய்துள்ளார். இவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு.
தென்னை மரத்தில் ஆண்டு தோறும் சிறகெடுப்பு என்ற கழிவுகள் அகற்றப்படுவதுண்டு. அது போல கட்சியில் இருந்த ஓரிரு கழிவுகள் விலகி கட்சி சுத்தமாகி உள்ளது.
இவ்வாறு விடியல் சேகர் கூறினார்.
தமாகாவின் சின்னம் தென்னந்தோப்பு. ஆகையால் தென்னை மரத்தை முன்வைத்து கலகக் குரல் எழுப்புவோரை சாடுகிறார்கள் தமாகா நிர்வாகிகள்.