234 தொகுதிகளுக்கும் விருப்பமனு... 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தரலாம்... தமாகா "அதிரடி"!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு வரும் 10ம் தேதி முதல் தமாகா.வினர் விருப்பமனு கொடுக்கலாம் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழகக் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனுக்களைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், தமாகாவும் விருப்பமனுக்களைக் கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2016-ல் நடைபெற இருக்கின்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்கான படிவங்களை த.மா.கா. மாவட்டத் தலைவர்/ பொறுப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விருப்ப மனுவை த.மா.கா. மாவட்டத் தலைவர்/ பொறுப்பாளர்களிடம் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தாக்கல் செய்யலாம்.
விருப்ப மனு தாக்கல் செய்வோர், விருப்ப மனு படிவத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட கட்டணத்தை செலுத்தி, மாவட்டத் தலைவர்/ பொறுப்பாளர்களிடம் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
1. பொதுத் தொகுதி-ரூ. 5 ஆயிரம். 2. தனித் தொகுதி-ரூ. 2 ஆயிரத்து 500. மேலும், விருப்ப மனு தாக்கல் செய்வோரின் வசதிக்காக அந்தந்த மாவட்டத்திலேயே விருப்ப மனுவை பெறுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட அனைத்து விருப்ப மனுக்கள் மற்றும் ரசீது புத்தகங்கள் ஆகியவைகளை அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவருடன் கலந்து சரிபார்த்து, மாவட்டத் தலைவரின் ஒப்புதலுடன் அவற்றை பிப்ரவரி மாதம் 14-ந்தேதிக்குள் சென்னை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்''என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.