மத துவேஷத்தை ஏற்படுத்தும் செயலில் பாஜக ஈடுபட்டால் போராடுவோம் - ஜி.கே.வாசன்
சென்னை: மத உணரவுகளை தூண்டும் செயலில் பாஜக ஈடுபடக் கூடாது. பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என்பது தவறான அறிவிப்பு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பகவத் கீதை, தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் அனைத்து மதங்களையும் சமமாகவே பார்க்க வேண்டும். நடத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நூலான பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிப்பது பிற மதம் சார்ந்தவர்களை புண்படுத்தும். மதம் சார்ந்து செயல்படுவது மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியாகும்.
மதம், இனம், மொழி, தேசம் கடந்து பல்வேறு தரப்பினரால் போற்றப்படும் ஒரு புனித நூலை சர்ச்சைக்குள்ளாக்க சுஷ்மா ஸ்வராஜ் முயன்றதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். எனவே, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கும் முடிவை கைவிட வேண்டும். பிரதமர் மோடி வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி பேசும்போது, அவரது அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது துரதிருஷ்டவசமானது.
இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மத உணர்வுகளைத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாசாரம் கொண்ட இந்தியாவில் மத மோதலைத் தூண்டும் செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டால் அதனை தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்த்து குரல் கொடுக்கும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.