வாழ்த்தொலி காதைப் பிளக்க... 'பிய்த்து' உதறிய தமாகா மகளிர்...!
சென்னை: சென்னையில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் மகளிர் அணியினர் ஜி.கே.வாசனை வாழ்த்தி போட்ட கோஷம் அனைவரையும் சுண்டி இழுத்து விட்டது.
மீண்டும் உருவாகியுள்ள தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும் திரளாக, ஆர்ப்பரிப்பான உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஜி.கே.வாசன் 12.05 மணிக்கு பொதுக்குழு அரங்கத்துக்கு வெளியே தமாகா கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
மகளிர் அணியினர் உற்சாகம்
கூட்டத்தில் மகளிர் அணியினர்தான் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை அவர்களின் உற்சாகக் குரலே அதிகம் ஒலித்தது.
பிரமாண்ட ஏற்பாடுகள்
ஜி.கே.வாசன் தலைமையில் கட்சி பிறந்த பின்னர் நடந்த முதல் பொதுக்குழுக் கூட்டம் என்பதால் ஏற்பாடுகளும் பிரமாண்டமாக, பிரமாதமாக இருந்தன.
நிரம்பி வழிந்த அரங்கு
கூட்டம் நடந்த அரங்கில் எள்ளைப் போட்டால் எண்ணையாகி விடும் என்பது போல கூட்டம் ஆர்ப்பரிப்புடன் காணப்பட்டது. அரங்கமே நிரம்பி வழிந்தது.
பூவைப் பிய்த்துப் போட்ட மகளிர்
கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணியினர் பெரும் உற்சாகத்துடன் பூக்களைப் பிய்த்து தூக்கி் போட்டு வாசனை வாழ்த்தி போட்ட கோஷம் விண்ணை முட்டியது.
தலைவர் வாசன்
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து கட்சியினர் மகிழ்ந்தனர். அப்போதுதான் மகளிர் அணியினர் பெரிய மல்லிகைப் பூ மாலையைப் பிய்த்து பூக்களைத் தூவி வாழ்த்திக் கோஷமிட்டனர்.
தொண்டை நரம்பு புடைக்க
தொண்டை நரம்பு புடைக்க வாசனை வாழ்த்தி அவர்கள் போட்ட கோஷத்தால் அத்தனை ஆண்களும் சற்று அயர்ந்துதான் போனார்கள் என்றால் மிகையில்லை. இதே உற்சாகத்துடன் வரும் சட்டசபைத் தேர்தலுக்கும் இவர்கள் உற்சாகக் கூட்டணியை அமைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.