தெலுங்கு நடிகர் சோபன்பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்.. கி.வீரலட்சுமி கைது
சென்னை: சென்னை: சோபன்பாபு சிலையை அகற்றக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் சிலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபாகரன் சிலையை அகற்றியதைக் கண்டித்தும், மீண்டும் அந்த சிலையை நிறுவ வலியுறுத்தியும், சென்னையில் உள்ள தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம் திங்கள்கிழமை காலை நடைபெறும் என்று தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி அறிவித்திருந்தார்.
போராட்ட அறிவிப்பையொட்டி சென்னை மேத்தா நகர் நெல்சன் சாலையில்யில் உள்ள சோபன் பாபுவின் சிலை அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் இடத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலை அவரது குடும்பத்தாரால் வைக்கப்பட்டுள்ளது, தெருக்களின் சந்திப்பில் சிலை இருந்தாலும் சிலை இருக்கும் இடம் சோபன்பாபு குடும்பத்தாரின் சொந்த இடம், ஆனால் சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தின் பகுதி பொதுமக்களின் நடை பாதையினை ஆக்கிரமித்து நீட்டிக்கொண்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சோபன்பாபுவின் சிலையின் பீடம் பொது இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டதாக கடந்த 2012ஆம் ஆண்டு நாளிதழ்களில் செய்தி வெளியானது. நடிகர் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை நீக்கலாம் என்று முடிவெடுத்தது போல பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சோபன்பாபு சிலையின் பீடத்தை அகற்றுமா அரசு என்று கேள்வி எழுந்தது. அதனையடுத்து சிவாஜி சிலையை அகற்றும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபாகரன் சிலையை அகற்றியதைக் கண்டித்து சென்னையில் உள்ள சோபன்பாபுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டத்தை தொடங்கியுள்ளனர் தமிழ் அமைப்பினர். இதனால் சிலை முன்னர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.